தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வெலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும், இன்று தங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் சிந்தக பண்டார தெரிவித்தார்.
எனினும், வேலைநிறுத்தம் குறித்து தனது கருத்தை தெரிவித்த தபால் மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
வேலைநிறுத்தத்தை கைவிட்டு கலந்துரையாடல் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு தபால் தொழிற்சங்கங்களை கேட்டுக்கொள்வதாகவும் ருவன் சத்குமார தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆசிரியர்கள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
குறித்த ஆசிரியர்கள் நேற்று காலை முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், விடியும் வரை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவே இருந்ததாகவும் ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல் தங்கள் குழந்தைகளை பாடசாலைகளில் சேர்க்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதாக ஆசிரியர் மற்றும் குழந்தைகள் சங்கத்தின் அழைப்பாளர் இந்திக அபேசிங்க தெரிவித்தார்.