நான்கு தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் கொன்கிரீட் மேல்தளம் (Roof Terrace) மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு, திருத்தப் பணிகள் இந்நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் (Roof Gutters),செப்புக் கதவு (Copper Door), பாராளுமன்ற வைத்திய நிலையம் (Parliament Medical Center), கழிவறைக் கட்டமைப்பு (Washrooms) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி அறை என்பவற்றிலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு அளவிலான திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்புக்கள் இணைப்புப் பொறியியல் திணைக்களத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருப்பினும், பாரிய அளவிலான திருத்த வேலைகள் தற்போதே முன்னெடுக்கப்படுகின்றன.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.