வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அவரது கால்கள் மற்றும் ஒரு கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வலஸ் கட்டா தற்போது மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அதன்படி, நேற்று (09) இரவு 9.15 மணியளவில், சந்தேக நபர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, தனது கைவிலங்குகளை கழற்றிவிட்டு நான்கு அதிகாரிகளுடன் கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.
கழிப்பறைக்குச் செல்லும்போது, வலஸ் கட்டா அதிகாரிகளைத் தாக்கி மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதன்போது அவரது கால்கள் உடைந்துள்ளதாகவும், ஒரு கையின் முழங்கை பகுதி உடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.