இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்புச் சபைக்குத் (Constitutional Council) வழங்கியுள்ளார்.
இந்த பரிந்துரையின் மீது இறுதி முடிவை எடுக்கும் வகையில் அரசியலமைப்புச் சபை, நாளைய தினம் கூடவுள்ளது.
தற்போதைய தலைமை நீதிபதி மூர்து பெர்னாண்டோ எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 25ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்த உள்ளார்.
நீண்டகால நீதித்துறை சேவையில் அனுபவம் பெற்ற ப்ரீதி பத்மன் சூரசேன, உச்ச நீதிமன்றின் சிரேஸ்ட நீதியரசர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இதேவேளை, நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட பல முக்கிய வழக்குகளில் நீதிபதியாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதும், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற மூவரடங்கிய விசாரணைக் குழுவின் தலைவராகவும் பணி வகித்து வருகிறார்.
இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், ப்ரீதி பத்மன் சூரசேன, இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார்.