மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், கந்தசாமி பிரபு ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி கலந்துகொண்டார்.
இதன்போது, சுற்றாடல் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பல முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தார். அதனடிப்படையில்,
ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை தாங்குதலால் உயிரிழப்பு உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பிரதேசத்திற்கு யானை வேலி அமைக்கப்பட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் இதற்கான நிதியினை விரைவாக ஒதுக்கீடு செய்து இத் தேவையை பூர்த்தி செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார்.
அதேபோல், ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள், மர அலைகள் என்பனவற்றால் சூழல் மாசடைவு, அதிக சத்தம் போன்ற பல காரணங்களால் இத்தொழிற்சாலைகளை ஓட்டமாவடி பத்திரிகை தொழிற்சாலை காணிகளுக்கு மாற்றுவதற்கு எழுபது ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது, சுற்றாடல் அதிகார சபை காணியை அமைச்சு வழங்குமாக இருந்தால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என தெரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதிமொழி வழங்கினார்.
– ஊடகப்பிரிவு