தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கையெழுத்து மற்றும் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இராஜேந்திரா, சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவும், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் அனைத்து இன மக்களின் உரிமையினை உறுதி செய்யும் சமவுரிமையுடைய அரசியலமைப்பினை உருவாக்கு ஆகிய கோரிக்கைகளை அடங்கியதாக இந்த கையெழுத்து போராட்டம் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.