இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்கள் சீரான நிலையில் உள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், மேலும் இரு இலங்கையர்கள் தற்காலிகமாக தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களது முதலாளி மாற்று தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளார். இலங்கை தூதரகத்தின் ஊழியர் ஒருவரின் வசிப்பிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் அவர் காயமடையவில்லை.
நிலைமை குறித்துப் புதுப்பித்த தூதுவர் பண்டார, ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நேற்று பிற்பகல் தொடங்கி இரவு முழுவதும் தொடர்ந்ததாகக் கூறினார்.
பல ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும் இடைமறிக்கப்பட்டாலும், டெல் அவிவ், ஹைஃபா மற்றும் ஜெருசலேம் உட்பட பல மக்கள் அடர்த்தியான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தூதரகம் வெளியிட்டுள்ளது.