நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும் இன்றியமையாதவைகளாக காணப்படுகின்றன. பிரச்சினைகளுக்கு தீர்வுகள் தேவை. இந்தப் பிரச்சினைகளை நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் தீர்க்க முடியும். எம்.எச். முஹம்மத் எப்போதும் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கினார். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை அடிப்படை உரிமைகளாகவும் மனித உரிமைகளாகவும் கருதி அவற்றைக் கட்டியெழுப்புவதில் எம்.எச். முஹம்மத் பெரும் சேவை ஆற்றியுள்ளார். மனிதர்களை வாழ வைக்கும் பயணத்திற்கான அடிப்படை காரணிகளை அடையாளம் கண்டு அடிமட்டத்தில் இருந்து சிறந்த சேவைகளை அவர் ஆற்றியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் சபாநாகயகர் எம்.எச்.முஹம்மத் அவர்களின் 104 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மறைந்த ரணசிங்க பிரேமதாசவும், எம்.எச். முஹம்மதுவும் அரசியல் சமகாலத்தவர்களாக இருந்து நாட்டின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையாக பக்க பலத்தை வழங்கினர். மேயராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சபாநாயகராகவும் பொரளைப் பகுதியை மையமாகக் கொண்டு மகத்தான சேவைகளை எம்.எச்.முஹம்மது ஆற்றியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அவரது குணாதியங்களைப் பார்க்கும்போது, அவர் மக்களோடு மிகவும் சமீபமாக நடந்து கொண்ட ஒருவராவார். அவர் பொதுமக்களின் குறைகளையும், பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மக்களோடு மக்களாக கலந்து அடிமட்ட மக்களை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவராக திகழ்ந்தார். அவர் எந்தப் பதவியை வகித்தாலும், மக்களின் குரலை அவர் மறந்து நடக்கவில்லை. வழங்கப்பட்ட வாய்ப்புகளை வீணடிக்காது நடந்து கொண்டார். மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அவர் நேரடியான முடிவுகளை எடுத்த மக்கள் தலைவராகவும் திகழ்ந்தார். அவர் எல்லா நேரங்களிலும் சாதாரண மக்களுடனே இருந்தார். தாம் பெற்ற பட்டம் பதவிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் ஒருபோதும் செயல்படவில்லை. இனக்குழுக்கள், மதங்கள் மற்றும் மக்கள் பிரிவுகளுக்கு இடையே பல்வேறு பிளவுகள், பிரிவினைகள் மற்றும் தேவையற்ற மோதல்கள் ஏற்பட்ட சந்தரப்பங்களில், தேசிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்த முயற்சிகளை முன்னெடுத்த உதாரணபுருஷராக திகழ்ந்தார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
60 களின் பிற்பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு என்ற எண்ணகருக்குவிற்கு அவர் பெரும் ஆதரவை வழங்கினார். மாளிகாவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதில் அவர் பெரும் பங்காற்றினார். கம் உதாவ வேலைத்திட்டத்தை மேம்படுத்த புதிய பல யோசனைகளையும் பரிந்துரைகளையும் கூட முன்வைத்து தனது ஒத்துழைப்பை நல்கினார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் குடிமக்களாக வாழும் உரிமையை இழந்த பாலஸ்தீன மக்கள் சார்பாக உரத்து குரல் எழுப்பினார். அந்தப் பயணத்திற்கு முன்னோடியாக திகழ்ந்த ரணசிங்க பிரேமதாசவுக்கு அவர் பெரும் ஒத்துழைப்பை வழங்கினார். ஐ.நா.வின் தீர்மானங்கள் 242 மற்றும் 338-இன் பிரகாரம், இரு நாடுகளும் அமைதியாகச் செயல்பட வேண்டும். இந்த தீர்மானத்தில் ரணசிங்க பிரேமதாச நேரடியாக நின்று குரல் கொடுத்த சந்தர்ப்பத்தில், எம்.எச்.முஹம்மது அவர்களும் அவருடன் கைகோர்த்து செயற்பட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.