இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இருதரப்புக்கு இடையே மோதல் தொடர்கின்ற காரணத்தால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மற்றும் அமேரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் – ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. உலகத் தலைவர்கள் இந்த மோதல் கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.
ட்ரோன்கள் அழிப்பு: கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் தங்கள் தேசத்தை நோக்கி எதிரிகள் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டவதாகவும், அதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார். இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உடன் ஷெபாஸ் ஷெரிப் பேசியுள்ளார். ஈரான் மீதான இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் தேசம் ஈரானுக்கு ஆதரவாக நிற்பதாக ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சி படையினர் தாக்குதல்: ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையிலும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மற்றும் ஈரான் மக்களின் தரப்பில் இருந்து ஈரான் ராணுவ நடவடிக்கைக்கு உறுதுணையாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டோம் என ஹவுதி செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹவுதி படையினர் மேற்கொண்டனர்.
ட்ரம்ப் எச்சரிக்கை: எந்த வகையிலாவது அமெரிக்காவை ஈரான் தாக்கினால் அதன் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். “ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் கூறியுள்ளார்.