தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பேரணியில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியவுடனான சமீபத்திய சந்திப்பின் போது இந்த யோசனை எழுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
“என்ன செய்ய வேண்டும் என்று சனத் ஜெயசூரிய என்னிடம் கேட்டபோது, எங்கள் முதல் ஐந்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டவும், ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தவும் நிச்சயமாக முயற்சிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச மைதானத்தை கட்டுவதும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வீரர்களை ஒன்றாகக் காண்பதும் தனது தொலைநோக்குப் பார்வையில் அடங்கும் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.