ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகினார். இதனையடுத்து, யோஷிஹிதே சுகா புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசாங்கம் கொவிட் தொற்றை கையாண்ட விதம்குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.
இதனையடுத்து, பிரதமர் யோஷிஹிதே சுகா, தனது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தில் சுதந்திர ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளதால் அக்கட்சியின் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் யோஷிஹிதே சுகா, தான் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்தார்.
இதனையடுத்து இடம்பெற்ற சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் 64 வயதான ஃபுமியோ கிஷிடா கடந்த வாரம் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவர் ஜப்பானின் 100 ஆவது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார்.
ஃபுமியோ கிஷிடா ஏற்கனவே 2012 – 2017 ஆம் ஆண்டுவரை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம் அவர் தோல்வியடைந்தார்.
ஜப்பானில் 1885 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை முறைமை அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.