2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.
கொவிட்-19 பரவல் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெற்றிருக்கவில்லை.
எனவே, செயன்முறைப் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பாடநெறிகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், எதிர்வரும் 2 தினங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், மீள் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம், பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
அழகியல் பாடநெறியின் செயன்முறைப் பரீட்சைகளுடன் பெறுபேறுகள் வெளியிடப்படாத மாணவர்கள், உயர்தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆகக்குறைந்த தகைமைகள் அடங்கிய விசேட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் மூலம் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.