வவுனியாவில் பதிவான நிலநடுக்கம் பாரிய நிலநடுக்கத்துக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும் இடைப்பட்ட மரிக்காரம்பளையாகும்.
இந்த குவி மையம் புவிமேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை நான் இது தொடர்பாக இட்ட பதிவில் கருத்துரைத்த பலர் கல் அகழ்வுச் செயற்பாடுகள், மற்றும் குழாய்க்கிணறு தோண்டுதல் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலநடுக்கம் தோன்றியிருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் புவி நடுக்கத்திற்கும் இவைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
வவுனியாவில் நிகழ்ந்த புவிநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.
எனினும், இந்த கல்லகழ்வு மற்றும் குழாய்க்கிணறுகள் புவி மேற்பரப்பில் இருந்து வெறுமனே 100 மீற்றருக்குள்ளேயே நிகழ்கின்றன என்பதுடன் இவை வேறுபல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
பொதுவாக எதிர்வு கூற முடியாத இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது.
உலகின் பல பிரதேசங்களில் நிகழ்ந்த பாரிய புவி நடுக்க நிகழ்வுகள் இரண்டாகவே நிகழ்ந்துள்ளன.
முதலாவது மிக மெதுவானதாக வெறும் நடுக்கத்துடன் கூடியதாகவே அமைந்துள்ளது. இதனை உணர்ந்து கட்டுமானங்களை விட்டு வெளியே வந்து வெளிப்பிரதேசங்களில் நின்றால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது புவி நடுக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.
அண்மைக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிக அளவில் பதிவாகின்ற நிலையில் இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதலாம்.