இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரித்துமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.
இதனையடுத்து நிதியமைச்சருடன் நீண்ட நேரம் சந்தையின் நிலை மற்றும் இறக்குமதிக்கான வரி என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் இணங்கியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமை, கப்பலுக்கான கட்டணம் அதிகரித்துள்ளமை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பால்மா 945 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதோடு குறித்த விலை அதிகரிப்பினை அடுத்து 1,145 ரூபாவுக்கு ஒரு கிலோகிராம் பால்மா விற்பனை செய்யப்படவுள்ளது.
குறித்த விலை அதிகரிப்புக்கு அனுமதி பெற அடுத்த வாரம் இடம்பெறும் வாழ்கை செலவு குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.