2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட உரை) நவம்பர் மாதம் 13ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 14 ஆம் திகதி முதல் இன்று (21) வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. மாலை ஆறு மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நாளை (22) முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளது.