பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் ஸுன்னத்தான நோன்பு நோற்று துஆக்களில் ஈடுபடுவோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ACJU/FRL/2023/82/372
2023.10.18 (1445.04.02)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு,
கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம். அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு அவசரமாக சுகத்தையும் கொடுத்தருள்வானாக.
இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும் பொழுது அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்க வேண்டும்.
வியாழன் மற்றும் திங்கட்கிழமை தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.
அவ்வகையில் பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நிலவவும் நீதி நிலைநாட்டப்படவும் வியாழக்கிழமை மற்றும் திங்கட்கிழமை தினங்களில் நோன்பு நோற்று துஆக்களில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் முஸ்லிம்களை வேண்டிக்கொள்கிறது.
அத்துடன் இதற்காக அனைத்து மஸ்ஜித்களிலும் ஐவேளைத் தொழுகைகளில் குனூத்-அந்-நாஸிலாவை ஓதிவருமாறு ஏலவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா