பேராதனை போதனா வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் உயிரிழந்ததாக கூறப்படும் 21 வயதுடைய யுவதியின் சடலம் நேற்று (12) இரவு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விளக்கமளிப்பிற்காக பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்த உள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்துபிட்டிய அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஊசி போட்ட பின்னரே அவர் இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி உயிரிழந்த சாமோதிக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து தொடர்பாக விளக்கமளித்தது.
அங்கு உரையாற்றிய அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த, இதில் 10 மில்லி மருந்தை கரைத்து நோயாளிக்கு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, நாட்டின் மருத்துவமனை அமைப்பில் தேவையான 10 மில்லி சிரிஞ்சர்கள் இல்லை. ஆனால் இந்த தாதியர் அந்த மருந்தை இரண்டு 5சிசி சிரிஞ்சர்களில் கரைத்து கொடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.