யாழ். குடாநாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருந்தது. கொவிட்டின் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது.
அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.
அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.