அண்மையில் பெலவத்த பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வெல்லம்பிடிய வர்த்தகரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பத்தரமுல்ல – பெலவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இந்த வர்த்தகர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
விசாரணை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்றையதினம் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையிலேயே சந்தேகநபர்களான தம்பதியரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.