மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிசுவின் சடலம் நேற்றுமுன்தினம் (24) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும், சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் இளைஞர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் சுகாதாரத்துறையில் டெங்கு ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் குறித்த இளைஞர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சோதனை நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில், புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டைச் சோதனை செய்த போது, சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி சிறுமியைக் கர்ப்பமாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்ப்பமடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில், நேற்று தனது வீட்டில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
பிறந்த சிசுவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்ததாகவும், சடலத்தை வீட்டின் முன்னால் உள்ள பாழடைந்த காணியில் வீசியுள்ளார் என்றும் பொலிஸ் விசரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த சிறுமியையும், இளைஞரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமி பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.