நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் , கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மிகவும் வருத்தத்துடன் அறிவித்தார்.
கட்சியின் செயற்குழு ஏகமானதான முடிவின் பிரகாரம் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றுக்கு தெரிவான தனக்கு வாக்களித்த 87,000 பேருக்கும், தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற பணிக்குழாமினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தநிலையில், நாடாளுமன்றின் சார்பாக அவருக்கு சபாநாயகர் வாழ்த்தையும் தெரிவித்தார்.
இதேவேளை, முஜிபுர் ரஹ்மானின் பதவி விலகலாம் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.