இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான ஆண்டான 2023 ஆம் ஆண்டில் எவரும் தமது பொறுப்புக்களை தட்டிக் கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டில் சுபீட்சமான இலங்கைக்காக தம்மை அர்ப்பணிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (02) ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுடன் 2023 புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பிக்கும் முன்னர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடி பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
பின்னர், அனைத்து ஊழியர்களுடன் ஜனாதிபதி தேநீர் விருந்தில் இணைந்தார். ஜனாதிபதி செயலணியின் ஊழியர்களுக்கும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புத்தாண்டில் பணிகளை ஆரம்பிக்கும் முன்னர் ஜனாதிபதி உரையாற்றுகையில்,
ஐந்தரை மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் ஒரு வரலாற்றுப் பணியைத் தொடங்கினோம்.
அரசாங்கம் வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது நாட்டை வழமைக்கு கொண்டு வர இந்த ஐந்தரை மாதங்களில் நடவடிக்கை எடுத்தோம். நமது பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. ஆனால் இன்று தேவைக்கேற்ப எரிபொருள், எரிவாயு, உணவுப் பொருட்கள் மற்றும் உரங்களை வழங்கும் திறன் நம்மிடம் உள்ளது.
கடந்த ஐந்தரை மாதங்களாக உங்கள் ஆதரவிற்கு நன்றி. எங்கள் திட்டம் இத்துடன் முடிவடையவில்லை. 2023 ஆம் ஆண்டு முக்கியமானது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி, நாட்டை அதன் கடன் சுமையிலிருந்து விடுவித்து நாம் முன்னேற வேண்டும்.
நவீன உலகத்துடன் போட்டி போடக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நாட்டின் அரசியல் அமைப்பில் மாற்றம் தேவை என பெரும்பாலானோர் கருதுகின்றனர். இந்த இரண்டு விஷயங்களையும் நாம் நிறைவேற்ற வேண்டும்.
தற்போதுள்ள அரசியல் அமைப்பில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். இதற்காக கடந்த ஆண்டை விட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாங்கள் இந்த அரசாங்கத்தை ஒரே இயந்திரமாக பார்க்கிறோம். பல திட்டங்கள் அமைச்சகங்களுக்கு தனியாக ஒதுக்கப்படவில்லை.
அனைத்து வேலைத் திட்டங்களும் இயந்திரத்தின் துணைப்பகுதிகளாக மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, யாருக்கும் இடையே போட்டியோ, இழுபறியோ இருக்கக் கூடாது.
அவர்கள் தங்கள் பொறுப்புகளை மட்டுப்படுத்தக் கூடாது. நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த நீங்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும். இந்த பணிகளின் போது ஜனாதிபதியின் அலுவலகம் மைய புள்ளியாக இருக்கும். இந்தப் பணிகள் அமைச்சரவை மற்றும் பிரதமர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும்.
உங்கள் வேலை வாரத்தில் 05 நாட்கள் அல்லது ஒரு நாளைக்கு 08 மணிநேரம் என்று மட்டுப்படுத்தப்படக்கூடாது.
அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள், இந்த நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கி, உங்கள் அனைவரினதும் ஆதரவுடன் இந்த நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்ல நான் எதிர்பார்த்துள்ளேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.