சீனாவும் பாகிஸ்தானும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரை சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி பங்கேற்றுவருகிறார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்ற ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் கல்வான் மற்றும் டோக்லாம் பகுதிகளில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவைத் தாக்குவதே சீனாவின் திட்டம்.
தற்போது சீனா, பாகிஸ்தானுடன் பொருளாதார உறவுகளையும் மேற்கொண்டுவருகிறது. போர் ஏற்படும் சூழலில் இந்தியா இரு நாடுகளுடன் போரிடும் சூழலில் இருக்கும். இது நமக்குப் பெரும் பின்னடைவு. இந்தியா மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறது. இடையூறுகளும், சண்டைகளும், குழப்பங்களும், வெறுப்புகளும் நம் நாட்டில் நிலவிவருகின்றன. இவ்விரு நாடுகளும் திடீர்த் தாக்குதலை நடத்தத் தயாராகிவருகின்றன.
அதன் காரணமாகவே மத்திய அரசு இது குறித்து மௌனமாக இருக்க முடியாது என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். எல்லையில் நிகழ்ந்தது குறித்து அரசு, நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். நாம் எந்த நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டுமோ, அதை நாம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியிருக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல், நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு துயரத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்” எனத் தெரிவித்தார்.
Source – https://www.indiatoday.in/india/story/china-pakistan-preparing-together-planning-single-front-war-congress-rahul-gandhi-army-veterans-2313465-2022-12-25