வத்தளை ஹெந்தல சந்திப் பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் எலகந்த வீதியிலிருந்து கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்தபோது போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த மேலும் இருவர் மதுபோதையில் இருந்ததால் சாரதியைக் கைது செய்ய பொலிஸார் முற்பட்டுள்ளனர்.
அப்போது, முச்சக்கரவண்டியில் வந்த மற்றைய இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததையடுத்து மற்றுமொரு பொலிஸ் குழுவினர் முச்சக்கரவண்டியை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மாபோல பிரதேசத்தில் வசிக்கும் 25, 29 மற்றும் 30 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.