மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) இரவு மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தால் மன்னார் , நானாட்டான், மாந்தை மேற்கு , மடு ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
மீன்பிடி வலைகள் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய் உள்ளன.
இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 50 குடும்பங்களைச் சார்ந்த 184 பேர் பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளனர்.
11 வீடுகள், ஒரு சிறு வியாபார குடிசை மற்றும் கடை ஆகியன சேதமடைந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகியுள்ளன.
மீன்பிடி படகுகள் பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளது. அத்தோடு 10 மீன்பிடி வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது.
7 படகுகள் சேதமடைந்துள்ளன. பல ஏக்கர் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.