ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த சந்தேக நபர் இன்று (29) அதிகாலை 4.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு ஆட் கடத்தலுக்கு உள்ளாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.