இளைஞரை காரில் (Defender Jeep) மூலம் கடத்திச் சென்று அநியாயமாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை ஜனவரி 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ, இந்த வழக்கு தொடர்பான இரண்டு காணொளி ஆதாரங்களை முன்வைக்க அரசுத் தரப்பு தயாராக இருப்பதாகவும், அந்த வீடியோ ஆதாரங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முறைப்பாடு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே 6 வருடங்களாக பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இதற்கு பதிலளித்த நீதிபதி அமல் ரணராஜா விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அன்றைய தினம் வழக்கை விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய அமில பிரியங்க என்ற இளைஞனை ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மெய்ப்பாதுகாவலர்கள் கடத்திச் சென்று அநியாயமாக சிறையில் அடைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக ஹிருணிகாவுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பாதுகாவலர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.