நீர்கொழும்பைச் சேர்ந்த யுவதி காதல் என்ற பெயரில் முன்னெடுத்த மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
17 வயதுடைய யுவதி டிக்டோக் சமூக வலைத்தளம் மூலம் இளைஞர்களுடன் பழகி, பின்னர் அந்த இளைஞர்களை (காதலன்) தான் வசிக்கும் கொச்சிக்கடைக்கு அழைத்து வந்து பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி தனது உண்மையான காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து இளைஞர்களை அழைத்து வந்து சிறைப்படுத்தி கப்பம் பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த கும்பல் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, கொச்சிக்கடை பொலிஸ் நிலைய தலைமை ஆய்வாளர் ஸ்ரீனிகா ஜெயக்கொடியின் வழிகாட்டுதலின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்த கும்பலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர்களில் ஒருவர் பசறை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத வைத்தியசாலையில் பணி புரிபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளமான டிக் டாக் மூலம் இளைஞர் ஒருவர் சந்தேக நபரான யுவதியுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அப்போது சந்தேக நபர் அந்த இளைஞனிடம் பணம் கேட்டுள்ளார்.
தற்போது தன்னிடம் பணம் இல்லை என அந்த இளைஞன் தெரிவித்ததையடுத்து அந்த உறவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.