வேலை செய்ய முடியாத அரச ஊழியர்களுக்கு, அரசாங்கம் வீணாக சம்பளம் கொடுக்கத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகையதொரு அழுத்தம் ஏற்பட்டதில்லை.
அந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். கடந்த வருடத்தை விட நமது பொருளாதாரம் 8 வீதத்தால் குறையும் நிலைமைக் காணப்படுகிறது.
இது வேகமாக இடம்பெறுகிறது. அதன் பிரதிபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டிவரும்.
இவ்வாறு நிகழும்போது, நாம் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று சிந்திக்க வேண்டும். இந்தப் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு முன்னெடுப்பது என்று பார்க்க வேண்டும்.
நாம் இந்தப் பெரும்போகத்தில் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்தால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை வழங்கும் பணியில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான உதவிகள் தற்போது கிடைத்துள்ளன.
அதேபோன்று உர மானியமும் வழங்கப்படுகிறது. தேவையான விதைகள் வழங்கப்படும்.
விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான அளவு எரிபொருள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
மேலும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
ஏனைய விவசாய பயிர்ச்செய்கைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தேயிலை, தென்னை, இறப்பர் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உரங்களை வழங்கி, விவசாயத்தில் முன்னேற வேண்டும்.
அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.
ஏற்றுமதித் துறையில் இருந்து இப்போது எமக்கு பணம் கிடைக்கிறது. ரூபாவின் பெறுமதி நிலையாகும்போது மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளின் பணம் நேரடியாக இலங்கைக்கு வந்து சேரும்.
இந்தியா எங்களுக்கு உதவி செய்துள்ளது, உலக வங்கி மற்றும் பிற நாடுகள் எங்களுக்கு உதவி செய்துள்ளன. இந்த சலுகைகளுடன், நமது விவசாயப் புரட்சியைத் தொடங்குவோம்.
கீழ்மட்டத்தில் ஏராளமான அரச அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு சுமார் 09 அதிகாரிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
வேலை செய்ய முடிந்தால், வேலை செய்யுங்கள், முடியாவிட்டால், வீட்டிற்குச் செல்லுங்கள்.
நாங்கள் வேலை செய்யாமல் பணம் வழங்கத் தயாராக இல்லை.
ஏனென்றால் நாங்கள் யாருக்கும் இலவசமாக உணவளிக்க முடியாது. இந்த நாட்டை முன்னேற்றா விட்டால் நானும் வெளியேற வேண்டும்.
எனவே முதலில் கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.
இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாம் அதை செய்ய வேண்டும். ஒன்றிணைந்து இந்த அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
அந்த செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பழைய அரசியலை கடைப்பிடிப்பதில் அர்த்தமில்லை.
அனைத்துக் கட்சிகளுடனும் பேசி அனைவரையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்.
நாம் இணைந்து பணியாற்றும்போது, புதிய அரசியல் கோட்பாடு நமக்குக் கிடைக்கும். நாம் ஒரு வினயமான அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
இன்று தேர்தலுக்குச் சென்று ஆட்சியைப் பெற்றுவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இதுதான் உண்மை. உண்மையைப் பேசுவோம். எனவே, அனைவரும் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவோம்.- என்றார்.