நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஶ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சிக்கலானவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 40 வருடங்களாக குறித்த துறையில் இயங்கிவரும் தரப்பினருடன் கலந்துரையாடி புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது தொழிற்சங்கங்கள் வெளியிடும் எதிர்ப்பு தனக்கு இடையூறாக அமையாது எனவும் தனக்கு மக்கள் நலனே முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 2018 ஆம் ஆண்டில் நாடு காணப்பட்ட நிலைக்கு மீண்டும் திரும்ப 2024 அல்லது 2025 ஆம் ஆண்டளவில் ஆகும் எனவும், 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் கடினமானதாக அமைந்தாலும், வருட இறுதியில் சாதகமான நிலைக்கு திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாரேனும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலை புறக்கணித்தால் மாற்று தீர்வை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.