கிராம மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் (GGP) கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த எட்டு (8) பெரிய தாங்கு தரைப் பேருந்துகளைக் (low-floor buses) கையளிக்கும் நிகழ்வு செப்டம்பர் 02 ஆம் திகதி நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அக்கியோ இசொமதா (H.E. Akio Isomata) இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
ஜப்பான் அரசாங்கத்தின் கிராம மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் (GGP) கீழ் மொத்தம் 362,476 அமெரிக்க டொலர் (சுமார் 112 மில்லியன் ரூபாய்) நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பில் பொதுப் பேருந்துகளுக்கான செயற்பாட்டு முறைமையை உருவாக்குவதற்காக ஜப்பான் இந்தப் பெரிய தாங்கு தரைப் பேருந்துகளை வழங்கியுள்ளது. இது போக்குவரத்துச் சவால்களை எதிர்கொள்ளும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட குடியிருப்பாளர்களின் சுயாதீனமான நடமாடும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பங்களிப்புச் செய்யும். இப்பேருந்துகள் யூகொஹமா (Yokohama) நகரசபையால் நன்கொடையாக வழங்கப்பட்டவை என்பதுடன், யூரோ 4 (Euro 4) உமிழ்வு தரநிலைகளுக்கு இணங்க முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட பாவிக்கப்பட்ட வாகனங்களாகும். இவற்றுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் இலங்கையின் “சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்திற்கும் பங்களிப்புச் செய்யும்.
தூதுவர் இசொமதா தனது உரையில் குறிப்பிடுகையில், “இந்த முறை வழங்கப்பட்ட பேருந்துகள் எண்ணிக்கையில் குறைவானவை என்றாலும், ஆயுள் காலம், அணுக்கம், பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேறு ஆகியன எவ்வாறு பொதுப் போக்குவரத்து அமைப்பில் ஒன்றிணைக்கப்படலாம் என்பதை நிரூபிப்பதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் குறைந்த தரைப் பேருந்துகளை விரிவுபடுத்துவதற்கும் இயக்குவதற்கும் இத்திட்டம் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார். மேலும் அவர், “உள்ளடக்கிய, நம்பகமான மற்றும் நிலையான நகர்ப்புறப் போக்குவரத்துக்கான இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதில் ஜப்பான் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது. இப்பேருந்துகள் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லாமல், மிகவும் அணுகக்கூடிய மற்றும் தூய்மையான எதிர்காலத்திற்கான எமது பகிரப்பட்ட அபிலாசைகளையும் ஏற்றிச் செல்லட்டும்” எனத் தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவிக்கையில், “இன்று இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நிலையான நட்புறவில் மற்றொரு மறக்க முடியாத அத்தியாயம் பதிவாகியுள்ளது. எமது நகரங்கள் வளர்ச்சியடையும் போது, நகர்ப்புறப் போக்குவரத்துச் சவாலும் அவசரமான ஒன்றாக மாறிவருகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் போக்குவரத்து வலையமப்பை நம்பியுள்ளனர். திறமையான, சௌகரியமான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை வழங்குவது இனி ஆடம்பரமாக இருக்க முடியாது; அதுவொரு அடிப்படைப் பொதுத் தேவையாகும்” என்றார். மேலும் அவர், “ஜப்பான் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் முயற்சியும் அர்ப்பணிப்புடன் கூடிய பின்தொடர்தலுமே இந்தப் பேருந்துகளைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உதவியது” என்றும் குறிப்பிட்டார்.



