கேகாலை நகரசபையின் 34 வயதான தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர், கபானா (Cabana) திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று காலை 10:25 மணியளவில் கேகாலை – யட்டோகொட பகுதியில் உள்ள விடுதியொன்றில் வைத்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பிற்பகலில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் நாலக்க வீரசிங்க, சந்தேகநபரை அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மினுவாங்கமுவ பகுதியில் உள்ள காணியொன்றில் கபானா திட்டத்தை அபிவிருத்தி செய்வதாகக் கூறி, குறித்த நகரசபை உறுப்பினர் தம்மிடம் 26 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொண்டதாக கண்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும், குறித்த திட்டம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், அப்பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


