வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று

ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக’ (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.

 

அனைத்து நபர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் நிறைவேற்றப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தினம் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

 

அந்த வகையில், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இம்முறை சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.

 

பாதிக்கப்பட்டவர்களின் உண்மையை அறிவதற்கான உரிமை, நீதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ஆகியவற்றை மையப்படுத்துவதோடு, உலகளாவிய ரீதியில் இந்தச் சாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் இத்தினம் வலியுறுத்துகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த தினமானது, காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவுகூரவும், அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே பிரதானமாக அனுசரிக்கப்படுகின்றது.

 

வரலாற்றுப் பின்னணியை நோக்கும்போது, 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ‘அனைத்து நபர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2010 ஆம் ஆண்டில் அது நடைமுறைக்கு வந்தது.

 

அதனைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 65/209 இலக்கத் தீர்மானத்தின் மூலம் ஒகஸ்ட் 30 ஆம் திகதியை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பொதுச் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

 

இதற்கமைவாகவே, 2011 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, “வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்” என்பது ஒரு கொடிய மனித உரிமை மீறலாகும். அரச அதிகாரிகளால் அல்லது அரசின் அங்கீகாரம், ஆதரவு அல்லது சம்மதத்துடன் செயல்படும் நபர்கள் அல்லது குழுக்களால் ஒரு நபர் கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், கடத்தப்படுதல் அல்லது வேறு ஏதேனும் வகையிலேனும் அவரது சுதந்திரம் பறிக்கப்படுவதை இது குறிக்கிறது.

 

அதனைத் தொடர்ந்து, அவ்வாறு சுதந்திரம் பறிக்கப்பட்டதை ஒப்புக்கொள்ள மறுப்பது அல்லது அந்த நபரின் கதி மற்றும் அவர் இருக்கும் இடத்தை மறைப்பது ஆகிய செயற்பாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.

 

இதன் மூலம், குறித்த நபர் சட்டத்தின் பாதுகாப்பிற்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தின்படியும், ஐ.நா. சாசனத்தின்படியும், இத்தகைய வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது பரவலான அல்லது முறையான தாக்குதலின் ஒரு பகுதியாக நிகழும்போது, அது ‘மனித குலத்திற்கு எதிரான குற்றமாக’ கருதப்படுகின்றது

 

சர்வதேச ரீதியில் இக்கொடிய குற்றத்தைத் தடுப்பதற்கான சட்டகட்டமைப்புகள் காணப்பட்டாலும், தற்போதைய உலகளாவிய நிலைமையானது தொடர்ந்தும் கவலையளிப்பதாகவே ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 

குறிப்பாக, மனித உரிமை ஆர்வலர்கள், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை அரசுகள் தமது மனித உரிமை கடப்பாடுகளை மீறுவதற்கான சாக்காகப் பயன்படுத்துதல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதலுக்கு காரணமானவர்களுக்கு எதிரான பரவலான தண்டனையின்மை போன்ற விடயங்கள் சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

 

இந்த உலகளாவிய பிரச்சினையின் தாக்கம் இலங்கையிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில் இன்னும் எவ்வித தகவல்களும் உறுதியாக வெளிவரவில்லை.

 

இதனால், காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களைத் தேடி நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் ‘காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்’ தாபிக்கப்பட்டது.

 

காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்த உண்மையைக் கண்டறிவதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதிலளிப்பதும் இதன் உத்தியோகபூர்வ நோக்கமாகும்.

 

இந்த அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையொன்றில், அவ்வாறு காணாமல் போனவர்களில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களது விபரங்கள் எவையும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

 

எது எவ்வாறாயினும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு தனிநபருக்கு எதிரான குற்றம் மாத்திரமன்றி, அது ஒட்டுமொத்த சமூகத்திலும் அச்சத்தை விதைக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் உறுதியானதும் நியாயமானதுமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அவ்வாறு கிடைக்கும் நீதியானது, பல ஆண்டுகளாகக் கண்ணீரோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கும் அந்த குடும்பங்களின் வாழ்வில் பாரிய நிம்மதியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நேபாளத்திற்கு புறப்படத் தயாராகும் இலங்கை நிவாரணக்குழு

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண...

பால்மா, பால் யோகட் விலையில் மாற்றம்?

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர்...