ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டுக்கு முத்திரையிட கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் நுழைவாயில் கடமையாற்றிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மறுத்தமையால் இலங்கையிலேயே அவர் சிக்கிக் கொண்டார் என்று ஏ.எஃப்.பி செய்திச் சேவை, இன்று (12) செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செவ்வாக்கிழமை (12) பட்டுப்பாதை நுழைவாயில் ஊடாக டுபாய்க்கு பயணிக்க இருந்தார் என்றும் விமான நிலைய ஊழியர்களுடனான அவமானகரமான மோதலை அடுத்து சொந்த நாட்டிலேயே அவர் சிக்கிக் கொண்டார் என்று ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.
73 வயதான அவர், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காகவும் தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் பதவி விலகுவதற்கு முன்னர் வெளிநாடு செல்ல விரும்புவதாக நம்பப்படுகிறது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் முத்திரையிட மறுத்ததையடுத்து, ஏனைய மற்ற விமான நிலைய பயணிகளின் பழிவாங்கலுக்கு பயந்து பொதுவான வழியாக செல்ல மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டதாகவும் ஏ.எஃப்.பி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லக்கூடிய நான்கு விமானங்களைத் தவறவிட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் இரவைக் கழித்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.