தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் ஊடாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரம் பொது சேவைகள் முன்னெடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் திணைக்களத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், சனிக்கிழமை கொடுப்பனவுகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து தபால் ஊழியர்களும் இன்று முதல் தமது கடமைகளில் இருந்து விலகிச் செயற்படுமாறு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி வலியுறுத்தியுள்ளது.