மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உறுதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது அமர்வின் பக்க அம்சமாக, வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் ஆகியோரையும் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா, கொரியக் குடியரசு, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தநிலையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் உடனான சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கபட்டோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு – நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்கு பேரவை மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட உள்ளூர் பொறிமுறைகளினால் நாட்டில் எட்டப்பட்டுள்ள பெறுபேறுகளையும் அவர் விளக்கியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்பு இன்னும் அவ்வாறே இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியான சென் சூ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கு பல ஆண்டுகளாக சீனா அளித்து வரும் ஆதரவிற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள், குறிப்பாக வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் உணவு – எரிசக்தி பாதுகாப்பில் அவற்றின் தாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அவர் சீன பிரதிநிதியுடன் கலந்துரையாடியுள்ளார்.