தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது. எரிபொருட்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. எரிபொருட்களை பெறுவதற்கான வரிசைகளும் பல கிலோமீட்டர் வரை நீண்டு செல்வதோடு எரிபொருட்களை பெற பல நாட்கள் தொடர்ந்து வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது.
இந்நிலைமை நாட்டின் அனைத்து துறைகளின் செயற்பாட்டையும் ஸ்தம்பிதம் அடைய செய்திருக்கின்றது. குறிப்பாக பொருட்களின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க கிடைக்கப்பெறும் பொருட்களின் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருக்கின்றது. வழமையான நாட்களிலேயே முறையான விநியோக வழிமுறையில்லாத தோட்ட பகுதிகள் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இச்சூழ்நிலையில் உடனடியாக தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்- என்றார்.