கந்தப்பளை – ஹைபொரஸ்ட் இலக்கம் (1) தோட்டத்தின் தனி குடியிருப்பு தொகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுமியொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த காவியா என அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி என்ற மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தினத்தன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும், அதன்போது தாய் மலசலகூடத்துக்கு சென்றிருந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
பின்னர் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்து உள்ளதை அவதானித்து, கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் கழுத்தில் இறுகியிருந்த பட்டி அகற்றப்பட்டு, சிறுமி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (13) காலை சிறுமியின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.