இலங்கையின் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் இல்லாத அளவிக்கு அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மின்சாரம், உணவு மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறித்த நிலைமையினால் அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையினரை குவித்துவருகின்றது.
கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் பிரதான வீதிகளை மறித்ததையடுத்து அரசாங்கம் படையினரை நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் சிலர் அண்மையில் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது
எரிவாயு கப்பல் இரண்டு இந்தவாரம் அளவில் நாட்டை வந்தடையவுள்ளதனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளபாரிய எரிவாயுதட்டுப்பாட்டை குறைக்கமுடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
“இந்த வாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள இரண்டு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இருவாரங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் சியாம் காஸ் நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம். நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, லாஃப்ஸ் கேஸின் 30 வீத விற்கப்படாத பங்கு எங்களைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே, இம்மாத இறுதிக்குள் நிலமை வழமைக்கு திரும்பும்.” என தெரிவித்தார்