இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ. கா. தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
நேற்றைய தினம் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், இ.தொ. காவின் இந்த திடீர் சந்திப்பானது கொழும்பு அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணமென பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், இ.தொ.கா ஜனாதிபதியை சந்தித்தமைக்கான காரணங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி சர்வ கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இ.தொ.காவும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத்திடம் நிலையான கொள்கை இல்லாத காரணத்தினால் மலையக மக்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவ்வாறு இ.தொ.கா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியமைக்கான காரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.