ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகோகொடை – ஜூபிலிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் திட்டமிட்ட கடும்போக்குவாதிகள் வன்முறைகளைத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரும்பு கம்பிகள், தடிகள் போன்றவற்றை தாங்கிய நபர்கள் போராட்டத்தில் வன்முறைகளை தூண்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கலகம் விளைவித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் திட்டமிடப்பட்ட கடும்போக்குவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் சமூக ஊடகங்களின் வாயிலாக மக்களை தூண்டி நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்ல மேற்கோள்ளப்படும் முயற்சிகள் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.