இலங்கைக்கான அமெரிக்காவின் அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக ஜூலி ஜே சேங்க் என்பவரை அமெரிக்கா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரான அவர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது நியமன சான்றிதழை கையளித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த அதிகாரியான இவர், இந்தோ-பசுபிக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் ராஜதந்திரியாக கடமையாற்றியுள்ளார்.
இதனை தவிர அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி ராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஈராக், கம்போடியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளிவிவகார சேவையில் இணைந்துக்கொண்ட சேங்க், கலிபோர்னியா சான் டியாகோ பல்லைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.
மேலும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். சேங்க, கொரியா, ஜப்பானிய,ஸ்பானிய மற்றும் கெமர் மொழிகளை சரளமாக பேசக் கூடியவர் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.