வவுனியா- பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகன் ஒருவர் அவ்வர்த்தக நிலையத்தினால் பொதியிடப்பட்ட சீனி பை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.
வீட்டிற்குச் சீனியினை எடுத்துச்சென்று அதனைப் பாவனைக்கு உட்படுத்திய சமயத்தில் அதனுள் ஓர் விதமான இரசாயன பொருள் கலந்துள்ளதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கிணங்க தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் “சீனி பொதியிடும் சமயத்தில் குளிர்பானம் தயார் செய்யப் பயன்படுத்தப்படும் சிற்றிக் அசிட் தவறுதலாகச் சீனியில் கலந்துள்ளது. தவறுக்கு வருந்துவதுடன் குறித்த சீனியினை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக எம்மிடம் அதனை மீள வழங்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என குறித்த வர்த்தக நிலையத்தின் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.