பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து வர்த்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
நீச்சல் தடாகத்திற்கு அருகில் இரத்தம் காணப்பட்ட நிலையிலேயே, குறித்த வர்த்தகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த வர்த்தகரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
வர்த்தகரின் தலைக்கு தாக்குதல் நடத்தி, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், பின்னர் அவரின் சடலம் நீச்சல் தடாகத்திற்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆடைத் தொழிலில் ஈடுபடும் 50 வயதான ரொஷான் வன்னிநாயக்க என்ற வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் வெல்லம்பிட்டி – கித்தம்பஹவ பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும், இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வர்த்தகர் கடந்த 30ம் திகதி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து, கடந்த 30ம் திகதி மாலை 5.30 அளவில் அவரது காரில் அவர் ஏறி சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் சகோதரி, அன்றைய தினம் இரவு 7 மணியளவில் பல தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட போதிலும், அவரது தொலைபேசியை அடைய முடியாதிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதேவேளை, குறித்த வர்த்தகரின் கார், நீர்கொழும்பு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காரை கொண்டு வந்ததாக கூறப்படும் தம்பதியினர், வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.